Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடங்கியது ரமலான் மாதம்... ஆனால், வன்முறையும் கொடூரமும் குறையவில்லை: காசா மக்கள் வேதனை

மார்ச் 13, 2024 12:26


காசா: காசாவில் மட்டும் கடுமையான போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. இதனிடையே, காசாவில் உதவி கோருபவர்களை மீண்டும் இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் - காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காசாவில் ரமலான் மாதம் போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் தொடங்கியுள்ளது. லெபனான் - இஸ்ரேல் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 100கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள லெபனானின் பால்பெக் அருகே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பல மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும், காசாவில் உதவி கோருபவர்களை மீண்டும் இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கில் 2,000 மருத்துவப் பணியாளர்கள் பஞ்சத்தை எதிர்கொள்வதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை, காசாவில் பலி எண்ணிக்கை 31,045 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,654 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆகும்.

காசாவின் தெற்கு எல்லை நகரமான ரஃபாவில், 1.5 மில்லியன் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். போருக்கு மத்தியில் காசாவில் இஸ்லாமியர்களின் புனித நோன்பான ரமலான் தொடங்கியுள்ளது. இது குறித்து வருத்தம் தெரிவிக்கும் நபர் ஒருவர், “நாங்கள் எதையும் தயார் செய்யவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கு என்ன இருக்கிறது. ரம்ஜானின் மகிழ்ச்சியை நாங்கள் உணரவில்லை... மக்கள் குளிரில் கூடாரங்களில் தங்கியிருப்பதைப் பாருங்கள்” என்றார்.

காசாவில் எங்கும் பாதுகாப்பாக இல்லை என்றும், தாங்கள் செல்லும் இடமெல்லாம் இஸ்ரேலியர்கள் குண்டுவீச்சித் தாக்குதல் நடத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ”புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாட்டில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். ஆனால், காசா முஸ்லீம்களாகிய எங்களுக்கு, இந்தப் புனித மாதம் மனவேதனை மற்றும் துக்கம் நிறைந்தது.

இஸ்ரேலிய ராணுவத்தின் கைகளில் சிக்கி வேதனை அனுபவித்து வருகிறோம். ரமலான் தொடங்கியும் அதன் வன்முறையும், கொடூரமும் நிற்கவில்லை, குறையவில்லை. கடந்த ரமலான்களின் நினைவுகள் எங்களை அரவணைக்கின்றன” என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்